ஹஜ்ஜின் சிறப்புகள்

அமல்களில் சிறந்தது

“செயல்களில் சிறந்தது எது?” என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ்” என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 26

பெண்களின் ஜிஹாத்

அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகின்றோம். எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை. எனினும் (பெண்களுக்கு) சிறந்த ஜிஹாத், பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் தான்” என்றார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1520

அன்று பிறந்த பாலகர்

“உடலுறவு மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனது தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாத பாலகனாக) திரும்புவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1521

சுவனமே பரிசு
“ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை”

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1773

தவிடுபொடியாகும் தவறுகள்
அல்லாஹ் என்னுடைய உள்ளத்தில் இஸ்லாத்தை அருளிய போது நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் நான் உடன்படிக்கை செய்வதற்காக உங்கள் வலது கையை விரியுங்கள்” என்று கூறினேன். அவர்கள் தன் கையை விரித்து எனது கையைப் பிடித்துக் கொண்டு, “அம்ரே! உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “நான் நிபந்தனை விதிக்கப் போகின்றேன்” என்று கூறினேன். “என்ன நிபந்தனை விதிக்கப் போகின்றாய்?” என்று கேட்டார்கள். “எனக்கு மன்னிக்கப்பட வேண்டும்” என்று நான் பதிலளித்தேன். “அம்ரே! நிச்சயமாக இஸ்லாம் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது. நிச்சயமாக ஹிஜ்ரத் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது. நிச்சயமாக ஹஜ் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது என்று உனக்குத் தெரியாதா?” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 173, இப்னுகுஸைமா

சிறப்பு விருந்தினர்
“அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர், ஹஜ் செய்பவர், உம்ரா செய்பவர் ஆகியோர் அல்லாஹ்வின் சிறப்பு விருந்தினர்கள் ஆவர். அவன் அவர்களை அழைத்தான். அவர்கள் பதிலளிக்கின்றனர். அவனிடம் அவர்கள் பிரார்த்தித்தார்கள். அவர்களுக்கு அவன் வழங்கி விடுகின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: இப்னுமாஜா 2884

இஹ்ராமின் போது இறந்தவர் தல்பியா சொல்லி எழுவார்
(இஹ்ராம் அணிந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் அல்லாஹ்வின் தூதருடன் தமது வாகனத்தின் மீதிருந்தார். திடீரென அவர் தனது வாகனத்திலிருந்து கீழே விழுந்து விட்டார். அது அவரது கழுத்தை முறித்து விட்டது. (அவர் இறந்து விட்டார்) அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரது உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரு ஆடைகளால் கஃபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது தலையை மறைக்கவும் வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் தல்பியா சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்பப் படுவார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 1266, முஸ்லிம் 2092

ரமளானில் ஒரு ஹஜ்
உம்மு ஸினான் என்றழைக்கப்படும் அன்சாரிப் பெண்ணை நோக்கி, “நீ என்னுடன் ஹஜ் செய்வதற்குத் தடையாக அமைந்தது எது?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், “எங்களிடம் தண்ணீர் கொண்டு வருவதற்கான இரண்டே இரண்டு ஒட்டகங்கள் தான் உள்ளன. ஓர் ஒட்டகத்தில் என் கணவரும் மகனும் சென்றுள்ளனர். நாங்கள் (இங்கே தண்ணீர் எடுத்துச்) செல்வதற்காக இன்னோர் ஒட்டகத்தை இங்கே எங்களுக்காக விட்டுச் சென்றிருக்கின்றனர்” என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ரமளான் மாதம் வந்ததும் நீ உம்ரா செய்! ஏனெனில் ரமளானில் உம்ரா செய்வது ஹஜ் செய்வதற்குச் சமமாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 2201
அரஃபா நாள் – மலக்குகளிடம் அல்லாஹ் பெருமிதம்
“பரட்டைத் தலையர்களாக, புழுதி படிந்தவர்களாக நிற்கும் எனது அடியார்களைப் பாருங்கள்” என்று அரஃபா பெருவெளியில் நிற்கும் மக்களைப் பற்றி மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ் மலக்குகளிடம் பெருமிதம் கொள்கின்றான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத் 7702

ஒன்பதாம் நாள் விடுதலை நாள்
அரஃபா நாளை விட வேறெந்த நாளிலும் அல்லாஹ் அடியானை அதிகமாக நரகத்திலிருந்து விடுதலை செய்வதில்லை. (அந்நாளில்) அவன் நெருங்கி வந்து இந்த அடியார்கள் என்னை விரும்புகின்றார்கள் என்று சொல்லி மலக்குகளிடம் பெருமிதம் கொள்கின்றான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 2402

அரஃபா நாளின் துஆவே சிறந்த துஆவாகும்

துஆக்களில் சிறந்தது அரஃபா நாளின் துஆவாகும். நானும் எனக்கு முந்தைய நபிமார்களும் சொன்னதில் சிறந்தது, “லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு ஹுல்ல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்’ ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்(ரலி),

நூல்:திர்மிதி3509

அரஃபா நோன்பு (ஹாஜி அல்லாதோருக்கு)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மாதத்தில் மூன்று (நாட்கள் நோன்பு நோற்பது)ம், ரமளானுக்கு ரமளான் நோன்பு நோற்பதும் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றது போலாகும். அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆஷுரா நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு பாவத்திற்குப் பரிகாரமாக அமையும் என அல்லாஹ்வின் மீது நான் ஆதரவு வைக்கின்றேன்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), நூல்: முஸ்லிம் 1976

சிறியவரின் ஜிஹாத் – ஹஜ்
முதியவர், சிறியவர், பலவீனமானரின் ஜிஹாத் ஹஜ்ஜும் உம்ராவும் ஆகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: நஸயீ 2579

தல்பியாவின் சிறப்பு
எந்த முஸ்லிமாவது தல்பியா கூறினால் அவரது வலப்புறம் மற்றும் இடப்புறம் உள்ள கற்கள், மரங்கள், களிமண் கட்டிகள் யாவும் தல்பியா கூறுகின்றன. இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரை பூமி முழுவதும் உள்ளவைகளும் இவ்வாறு தல்பியா கூறுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), நூல்: திர்மிதீ 758

தவாஃபின் சிறப்பு
யார் கஅபாவை வலம் வந்து இரு ரக்அத்துகள் தொழுகின்றாரோ அவர் ஓர் அடிமையை உரிமை விட்டவர் போலாவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: இப்னுமாஜா 2947

சாட்சி சொல்லும் ஹஜருல் அஸ்வத்

கியாமத் நாளில் பார்க்கும் இரு கண்கள் கொண்டதாகவும் பேசும் நாவுகள் கொண்டதாகவும் ஹஜருல் அஸ்வதை எழுப்புவான். யார் இதை முத்தமிட்டாரோ அவருக்காக அது சாட்சி கூறும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: திர்மிதீ 884

மழித்துக் கொள்பவருக்கு மன்னிப்பு

நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின் போது தலையை மழித்தார்கள். அவர்கள், “இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக!” என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று தோழர்கள் கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள், “இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கிருபை செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று தோழர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், “முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1727

ஜம்ஜமின் சிறப்பு
அது (ஜம்ஜம் நீர்) பரக்கத் செய்யப் பட்டதாகும். உண்ணுபவருக்கு உணவாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: முஸ்லிம் 4520

மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவதன் சிறப்பு

மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது அது அல்லாததில் (மற்ற பள்ளிகளில்) ஒரு லட்சம் தொழுவதை விடச் சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: அஹ்மத் 14167, இப்னுமாஜா 1396

மஸ்ஜிதுந்நபவீயில் தொழுவதன் சிறப்பு

மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட

எனது பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1190

மஸ்ஜிதுல் குபாவில் தொழுவதன் சிறப்பு

யார் தனது வீட்டில் உளூச் செய்து மஸ்ஜிது குபாவுக்கு வந்து அதில் ஒரு தொழுகை தொழுகின்றாரோ அவருக்கு உம்ரா செய்த கூலி உண்டு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஹனீஃப் (ரலி), நூல்: இப்னுமாஜா 1406, நஸயீ 692

ஹை-டெக் ஜம்ராத் பாலம் தயார்! சவூதியில் அரஃபா தினம் அறிவிப்பு!!


உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் சவூதி அரேபியாவில் உள்ள இரு புனித தலங்களான மக்கா & மதீனாவை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். பன்றிக் காய்ச்சல் பயம் உலகை ஆட்டிப்படைக்கும் இவ்வேளையில், அவற்றையெல்லாம் புறம் தள்ளி, இஸ்லாத்தின் ஐம்பெருங்கடமைகளுள் ஒன்றான ஹஜ் கடமையை நிறைவேற்ற பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் நாள்தோறும் சவூதிக்கு வந்து கொண்டு உள்ளனர்.

இந்நிலையில், ஹஜ் கிரியையின் மிக முக்கிய அம்சமான, பிறை 9 ஆம் நாள் (அரஃபா தினம்) வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதி வியாழக்கிழமை என்பதாக, சவூதி சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. நேற்று (17.11.2009 செவ்வாய்) மாலை, சவூதியின் பல பகுதிகளில் பிறை பார்த்ததின் அடிப்படையில், சவுதியில் துல்ஹஜ் முதல் பிறை நவம்பர் 18 புதன் கிழமை என்றும், அரஃபா தினம் நவம்பர் 26 வியாழக்கிழமை என்றும், ஹஜ் பெருநாள் நவம்பர் 27 வெள்ளிகிழமை என்றும், சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி அப்துர்ரஹ்மான் அல்-கெல்யா அறிவித்தார்.

இந்நிலையில், ஜம்ராத்தில் கல் எறியும் பகுதியான மினாவில் உள்ள “ஜம்ராத் பாலம்”, ஐந்தடுக்குகளாக ஹை-டெக் வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டு இவ்வருட ஹஜ் கிரியைகளுக்காக தயாராகி உள்ளது. கிட்டத்தட்ட 4.5 பில்லியன் சவூதி ரியால் பட்ஜெட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த 5 அடுக்கு ஜம்ராத் பாலம், ஒரு மணி நேரத்தில், 3 லட்சம் பேர்கள் கல்லெறிய வசதியாக அமையும். கல்லெறியும் இடத்தில் ஹாஜிகளுக்கு பாதுகாவலாகவும், கூட்டத்தை ஒழுங்கு படுத்தவும், 12000 காவல்துறையினர் தயாராக இருப்பார்கள் என்று ஹஜ் பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

10 நுழைவாயில்களும், 12 வெளியேறும் வாயில்களும் உள்ளதாக அமைக்கப்பட்டுள்ள இந்த் பாலம், கூட்ட நெரிசலை தவிர்த்து, உயிர்ச்சேதம் ஏற்படுவதை தவிர்க்க உதவுவதாக அமையும் இன்ஷா அல்லாஹ்.

வேகமாகப் பரவும் இனிய மார்க்கம் இஸ்லாம்.

மேற்கத்தியக் கலாச்சாரம் முன்வைக்கும் வாழ்க்கை முறையினால் நம்பிக்கை இழந்துபோய் 14,000த்திற்கும் அதிகமான பிரித்தானியர்கள் இஸ்லாத்தில் இணைந்துள்ளதாக ஆதாரப் பூர்வமான ஆய்வுகள் இப்போது வெளிவந்துள்ளன. "இவ்வாறு இஸ்லாத்தில் இணைந்துள்ளவர்களில் பல பிரபலங்கள் இருப்பது, முஸ்லிம்கள் தீவிரவாதிகள் எனும் பொய்ப் பிரச்சரத்திற்கும் அவதூறுக்கும் ஆளாகி அச்சமுற்ற நிலையில் வாழும் முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் ஊட்டச் சக்தியாகத் திகழ்கிறது" என்று முஸ்லிம் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உண்மையான இஸ்லாத்தை பிரிட்டிஷ் வெள்ளையர்களுக்கு விளக்கிச் சொல்லும் பெரு முயற்சியில் உள்ள பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்ஸில், பிரிட்டனின் முன்னாள் சுகாதார அமைச்சரின் மகன் அஹ்மத் டோப்ஸன் என்பாரைத் தமது புதிய குழுவின் தலைவராக நியமித்துள்ளது.

முன்னாள் பிபிசி இயக்குனர் யஹ்யா பிரிட் (ஜொனாதன் பிரிட்), கிருத்துவத்தில் இருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்கள் பற்றிய தமது தொடர் ஆய்வுகள் மூலம் இஸ்லாத்தைத் தழுவிய புதிய முஸ்லிம்கள் எண்ணிக்கை மொத்தம் 14,200 என்று தீர்மானித்துள்ளார். இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்கள் பற்றிக் சென்ற வாரம் குறிப்பிடுகையில், "அமெரிக்காவில் மால்கம் எக்ஸ் (Malcom X) இஸ்லாத்தில் இணைந்து அமெரிக்கக் கருப்பினத்தவர்களுக்கு நலன் சேர்த்தார். மேலும், இஸ்லாத்தைத் தற்போது இங்குப் பார்க்கப் படும் அந்நியத் தன்மை போலல்லாமல், ஒரு தேசிய அளவிலான மார்க்கமாக அங்கு மாற்றியிருந்தார். அதுமட்டுமின்றி, இஸ்லாத்தின் சமநிலையான சீரமைப்பு, உறுதியான நம்பிக்கை, அதன் அழுத்தமான ஆன்மீகம் ஆகியன தமக்கு எவ்வாறு மனநிறைவைத் தந்தன என்பதையும் அவர் விளக்கிச் சொன்னார். பிரிட்டனிலுள்ள வெள்ளையர்களை இஸ்லாத்தின்பால் இலகுவாகக் கொண்டுவர அவரைப் போன்ற ஒரு தலைவர் இங்குத் தேவை" எனும் கருத்தை பிரிட் வலியுறுத்தினார்.

ஹெர்பர்ட் ஹென்ரியின் கொள்ளுப் பேத்தியான எம்மா கிளார்க்கும் இஸ்லாத்தைத் தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். முன்பு வேல்ஸ் இளவரசரின் தோட்டங்களின் வடிவமைப்புப் பொறுப்பில் இருந்த இவர், தற்போது ஒரு பள்ளிவாசல் தோட்டத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களிடம் உரையாடும்போது, "நான் இஸ்லாத்தை ஏற்றது சந்தேகத்தின் பிடியில் சிக்கியிருந்த மேற்கத்தியக் கலாச்சர நெறிமுறைகளில் இருந்து மிகவும் வெறுப்புற்றதாலும் அதனைச் சுற்றியுள்ள அசிங்கங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவுமே" என்று குறிப்பிட்டார். இவருடைய பாட்டனார் ஹெர்பர்ட் 1908 முதல் 1916 வரை பிரிட்டனுடைய பிரதமராக இருந்து, முதல் உலகப் போரில் பிரிட்டனுடைய வெற்றி வாகைக்குத் தலைமை வகித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

இஸ்லாத்தைத் தழுவியவர்களில் பெரும்பாலோர் சார்ல்ஸ் ஈஸ்டன் எழுதிய 'Islam and the Destiny of Man' (இஸ்லாமும் மனித விதியும்) எனும் புத்தகத்தினால் மிகவும் ஈர்க்கப் பட்டவர்கள் ஆவர். "எனக்கு வரும் ஆயிரக்கணக்கான கடிதங்களில், மனிதர்களின் மனோஇச்சைகளைப் பின்பற்றிடும் சமகாலக் கிருத்துவத்தின் நடைமுறையில் நம்பிக்கையிழந்து விட்ட நிலையில், அதுவல்லாத இதைப் போன்ற ஓர் உண்மை மார்க்கத்தைத்தான் தேடினோம் என்ற கருத்து பரவலாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது" என்று ஈஸ்டன் கூறுகிறார்.

இஸ்லாத்தைத் தழுவிய The earl of Yarbrough (எர்ல் ஆஃப் யார்ப்ரௌஹ்) எனும் லின்கன்ஷைரிலுள்ள 28000 ஏக்கர் நிலச்சுவான்தார் ஒருவர் பத்திரி்கையாளர்களிடம் பேசும்போது, "நான் எனது பெயரை அப்துல் மத்தீன் என்று மாற்றியுள்ளேன். இஸ்லாத்தை ஆய்வு செய்யுங்கள்; அதன் அழகிய தன்மையை நீங்கள் உணர்வீர்கள் என்பதே நான் உங்களுக்குச் சொல்ல விரும்பும் செய்தியாகும்" என்று கூறினார். மாண்புமிகு அரசியவர்கள் பக்கிங்கம் ( Buckingham Palace) அரண்மனையில் வேலை செய்பவர்களுக்கு வெள்ளிக்கிழமைத் தொழுகையை நிறைவேற்றிட நேரம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் என்பது மகிழ்வளிக்கும் தகவலாகும்!.

இங்குக் குறிப்பிடப் பட்டுள்ளவர்கள் பிரிட்டன் அரசாங்கத்தின் நேரடித் தொடர்பில் உயர்பதவிகளும் அந்தஸ்துகளும் தலைமைத்துவமும் அதிகாரமும் பெற்று நாடாளுமன்ற ஆட்சி அவைகளில் அமர்ந்திருந்த செல்வந்த மூதாதையரின் வழிவந்தவர்கள் ஆவார்கள். அவர்களது நாடு எப்போதும் வேறு யாராலும் ஆட்சி செய்யப் படாத ஒரு நாடு. அப்படிப் பட்டவர்களின் வழித்தோன்றல்களுக்கு என்னதான் நேர்ந்தது? அவர்களை அதிகாரம் மூலம் பலவந்தமாக இஸ்லாத்தைத் தழுவிட எவரும் நிர்ப்பந்திக்க வில்லை!

"எங்களுடைய உள்ளங்களுக்குக் கிடைக்கப்பெற்ற விவரிக்க இயலாத மன நிறைவின் வெளிபாட்டின் விளைவே எங்களது இஸ்லாத்தின் தேர்வாகும். இவ்வளவுக்கும் பின்னர் வெட்கம், பச்சாதாபம், தாழ்வு மனப்பான்மை போன்ற காரணங்களோ பிறர் என்ன நினைப்பார்கள் என்ற அச்ச உணர்வோ எனது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு விடும் என்ற எண்ணமோ என்னை சக ஊழியர்களுக்கு மத்தியில் ஜும்மா தொழுகை நிறைவேற்றிடாமல் தடுத்திட முடியாது - அதுவும் அரசாங்கத் தலைமையகமாகிய பக்கிங்கம் பாலஸில் எனக்குத் தொழுகின்ற வசதி செய்து கொடுக்கப் பட்டு இருக்கின்றது எனும் நிலையில்" எனக் கூறுகின்றார் அரண்மனை ஊழியர்களில் ஒருவர்.

கள ஆய்வு : முஹம்மத் மாலிக் முஹம்மத் ஆரிஃப்

தமிழாக்கம் : இபுனு ஹனீஃப்


http://www.satyamargam.com/

இறை இல்லம் கட்ட நிதி உதவி தேவை.



சென்னை கீழ்பாக்கத்தில் இறை இல்லம் கட்ட முயற்சிக்கப்பட்டு வருகிறது.எனவே அல்லாஹ்வின் அருள் நாடி,நிதி உதவி செய்யும்படி சகோதரர்களை வேண்டுகிறோம்.அல்லாஹ்விற்காக இறை இல்லம் கட்டுபவர்களுக்கு,அல்லாஹ் சுவனத்தில் மாளிகை ஒன்று கட்டுகிறான் என்பது ஹதீஸாகும்.

பள்ளிவாசல் கட்ட இடம் வாங்கவும்,கட்டவும் ரூபாய் 50,0000.00 என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, AL-MADRASATHUL DHEENIYATH ( Regd)NO.12,Halls Road, Kilpauk, CHENNAI-600010 என்ற இடத்தில் தொழுகை நடைபெற்று வருகிறது,ஆனால்- 25 நபர்கள் மட்டுமே தொழ இடம் உள்ளது,இன்ஷா அல்லாஹ் இன்னும் நிறைய மக்கள் தொழ வேண்டும் என்றால்,அதற்கு பெரிய பள்ளியாக கட்டினால் மட்டுமே முடியும்.தாராளமாக உதவுங்கள்,இன்ஷா அல்லாஹ்,அதை பன் மடங்காக்கி இம்மையிலும்,மறுமையிலும் தருவான்,ஆமீன்.

மேலும் விவரங்களுக்கு,

saibudeen 91-9841045673

kilpauk muslim welfare association

தகவல்:சைபுதீன்,அதிரை.

பாருங்கள்,பார்க்கத் தூண்டுங்கள்.

மும்பையில் அல்லாஹ்வின் அருளால்,பீஸ் கான்பரன்ஸ் தொடங்கி நடந்துவருகிறது,அந்த நிகழ்ச்சிகள் யாவும் பீஸ் டிவி மூலம் நேரடி ஒளி பரப்பாகவும் காண்பிக்கப்படுகிறது.சுமார் 30 நாடுகளிலிருந்து அழைப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.மேற்கொண்டு விபரம் அறிய
http://peaceconference.in/index.htm இந்த தளம் சென்று விபரங்கள் அறியலாம்.மேலும் டாகடர் ஜாகிர் நாயக் அவர்களின் இணைய தளமான http://irf.net/ சென்றும் அறிந்துகொள்ளலாம்.நீங்கள் பார்ப்பதோடு,உங்கள் மாற்று மத நண்பர்களையும் பார்க்கத்தூண்டுங்கள்.

சுவர்க்கவாசிகள் VS நரகவாசிகள்

சுவர்க்கவாசிகள் VS நரகவாசிகள்




உணவு


இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்) (56:20,21)

அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை. அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது அன்றியும் பசியையும் தணிக்காது. (88:6,7)
-----------------------------------------------------------------

பானம்

நிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளைகளிலிருந்து (பானம்) அருந்துவார்கள் அதன் கலப்பு கற்பூரமாக இருக்கும் (76:5)

அவனுக்கு முன்னால் நரகம் தான் இருக்கிறது, இன்னும் அவனுக்கு (துர் நாற்றமுள்ள) சீழ் நீரே குடிக்கக் கொடுக்கப்படும். அதை அவன் (சிரமத்தோடு) சிறிது சிறிதாக விழுங்குவான். எனினும் அது அவன் தொண்டையில் எளிதில் இறங்காது ஒவ்வொரு திசையிலிருந்தும் அவனுக்கு மரணம் வந்து கொண்டிருக்கும். எனினும் அவன் இறந்து விடுபவனும் அல்லன். அன்றியும் அவன் முன்னே (மிகக்) கொடிய வேதனையும் உண்டு. (14:16,17)
------------------------------------------------------------

ஆடை


அவர்களின் மீது ஸுன்துஸ், இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள் இருக்கும். இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர். அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான். (76:21)

(முஃமின்களும், முஃமின்களல்லாதவருமான) இரு தரப்பாரும் தம் இறைவனைப் பற்றித் தர்க்கிக்கின்றனர். ஆனால் எவர் (இறைவனை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பிலிருந்து ஆடைகள் தாயாரிக்கப்படும். கொதிக்கும் நீர் அவர்கள் தலைகளின் மேல் ஊற்றப்படும். (22:19)
-------------------------------------------------------------
தோற்றம்

அந்நாளில் சிலமுகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும். சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும். (80:38,39)

ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும். (80:40)
--------------------------------------------------
படுக்கை

(பொன்னிழைகளால்) செய்யப்பட்ட கட்டில்களின் மீது - ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள். (56:15,16)

அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம். (7:41)
----------------------------------------------------------
வரவேற்பு

எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள். அங்கு அவர்கள் வந்ததும், அதன் வாசல்கள் திறக்கப்படும். அதன் காவலர்கள் அவர்களை நோக்கி "உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் மணம் பெற்றவர்கள் எனவே அதில் பிரவேசியுங்கள் என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்" (என்று அவர்களிடம் கூறப்படும்). (39:73)

"நரகத்தின் வாயில்களுள் நுழைந்து விடுங்கள் என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்" என்று (அவர்களுக்குக்) கூறப்படும் பெருமை அடித்துக் கொண்டிருந்தோருடைய தங்குமிடம் மிகவும் கெட்டது. (39:72)
-------------------------------------------------------------
தங்குமிடம்

அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான் சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான் அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் அன்றியும், நிலையான அத்னு என்னும் நிலையான சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு இதுவே மகத்தான பாக்கியமாகும். (61:12)

அது சுட்டெரிக்கும் நெருப்பாகும் (101:11)

அவர்கள் நரகில் கருகுவார்கள் (83:16)
---------------------------------------------------------------
முன்னேற்பாடு

அவர்கள் செய்த (நற்)கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது. (32:17)

மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம். (17:10)
--------------------------------------------------------------
நிரந்தரம்

அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்கள் அதிலிருந்து மாறி (வேறிடம்) செல்ல விரும்ப மாட்டார்கள். (18:108)

நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் - அதில் என்றென்றும் இருப்பார்கள் - இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள். (98:6)